பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை வரலாறு எழுதுவது வழக்கம். மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறும் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் அவரது கவிதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மோடி எழுதிய கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. ராஜலக்ஷ்மி சீனிவாசன் கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நூலின் பிரதியை வெளியிட கவிஞர் வைரமுத்து பிரதியை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நல்லி குப்புச்சாமி, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , `மோடி மற்றவர்கள் நினைப்பது போல் முரட்டுத்தனமானவர் அல்ல. நல்ல உழைப்பாளி. மக்கள் தன் மேல் கூறும் தவறுகளை உள்வாங்கிக் கொண்டு அதை திருத்திக் கொண்ட ஆட்சி நடத்துபவர் மோடி’ என்றார்.
விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, `மோடி அவர்கள் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் நாகரீகத்தைக் காட்டுகிறது’ என்றார்.