துபாயில் சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (23) அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இணைந்து இது தொடர்பான மோசடியை நடத்தியதுடன், ஏழு பேரிடம் இருந்து தலா 750,000 ரூபா வீதம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள்
குறித்த தம்பதிக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊவா மாகாண குடியகல்வு வள நிலையத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், அவர்களை கைது செய்ய பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது குறித்த பெண் மருதானை பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாக கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மஹியங்கன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்தவுடன் அவரது கணவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவரைக் கண்டுபிடிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று (24) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.