பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தனது வாடிக்கையாளரின் காரைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்றவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் திருநங்கையான பாலியல் தொழிலாளி ஒருவர்.
Vanesa Campos (36) பூங்கா ஒன்றில் தனது வாடிக்கையாளர் ஒருவரை திருடர்களிடமிருந்து காக்கும் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பாலியல் தொழிலாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் பேரணி ஒன்றை நடத்தினர்.பிரான்சில் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதமானது என்பதால் பூங்கா ஒன்றில் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து வந்தனர்.
அங்கு தனது வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க சென்றபோது சுமார் 10 பேர் கத்திகள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் அந்த நபரின் காரை திருட முயன்றனர்.
அப்போது அவர்களை Vanesa தடுக்க முயன்றபோது ஒருவன் அவரை துப்பாக்கியால் சுட்டான்.
மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளார் Vanesa. ஆனால் அவரது நண்பர்கள் வந்து பார்க்கும்போது அவரது உயிர் பிரிந்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இது வரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கோரி Vanesaவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் ஏராளமானோர் பேரணி ஒன்றில் பங்கேற்றனர்.