உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கிறது. ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
கால் இறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் ஆப் 16), கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டி என்று நாக் அவுட் சுற்றில் அனல் பறக்க உள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், பிரேசில் அணிகளில் ஒன்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன.
நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), முகமது சாலா (எகிப்து) ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலகின் மிகச்சிறந்த அணிகள், வீரர்கள் பங்கேற்கும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன.
கவுன்டவுன் தொடங்கியுள்ள நிலையில், கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் போட்டியை காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர். ஜூன் 14ம் தேதியன்று முதல் போட்டி நடைபெறவுள்ளது.
இதில், ரஷ்யா-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இரவு 8. 30 மணிக்கு போட்டி துவங்குகிறது.
28ம் தேதியன்று லீக் சுற்று நிறைவடைகிறது. கால் இறுதிக்கு முந்தைய சுற்று (நாக் அவுட்) ஜூன் 30ல் தொடங்கி ஜூலை 3ல் முடிகிறது.
ஜூலை 6 முதல் ஜூலை 11ம் தேதி வரை கால், அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ம் தேதி 3ம் இடத்துக்கான போட்டியும், ஜூன் 15ல் இறுதிப்போட்டியும் நடக்கிறது.
உலக கோப்பை தொடரில் ‘ரவுண்ட் ஆப் 16’, அரை இறுதி, 3வது இடத்துக்கான பிளே ஆப் போட்டி உட்பட மொத்தம் 7 ஆட்டங்கள் புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளன.
ஜூன் 15ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மொராக்கோ – ஈரான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
67,000 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய மைதானமான இது, பறக்கும் தட்டு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டதாகும்.
நீட்டத்தக்க கூரை, சுருட்டிவிடக் கூடிய ஆடுகளம், ஆண்டு முழுவதற்கும் வெப்பநிலையை ஒரே சீராகப் பராமரிப்பதற்கான வசதி ஆகியவை இந்த ஆடுகளத்தின் சிறப்பம்சங்களாக உள்ளன.
பிரேசில் பேபி கேப்ரியல்
உலக தர வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் அணி பிரேசில்.
இதில் இடம் பெற்றிருக்கிறார் இளம் வீரர் கேப்ரியல் பெர்ணான்டோ டீ ஜீசஸ். சுருக்கமாக கேப்ரியல் ஜீசஸ்.
ஆமாம், 21 வயது ஆனாலும் கேப்ரியலை இன்னும் பேபி (குழந்தை) என்றுதான் அழைக்கிறார் ்அம்மா வேரா லூசியா ஜீசஸ். பெயர் மட்டுமல்ல அவர் வாழ்க்கையும் வித்தியாசம்தான்.
பிரேசிலின் ஜர்டிம் பெரியில் உள்ள குடிசைப் பகுதியில் கேப்ரியல் குடும்பம் வசித்து வந்தது. கணவர் டினீஸ் டீ ஜீசஸ் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்த ஓடிவிட்டார்.
ஆனாலும் நான்கு பிள்ளைகளையும் ஒழுக்கமாக வளர்த்து கரை சேர்த்தவர் லூசியா. அதிலும் கடைசி பிள்ளையான கேப்ரியல் செல்ல பிள்ளையாக இருந்தாலும் கட்டுப்பாட்டுக்கு பஞ்சமில்லை.
கேப்ரியல் 2013ம் ஆண்டு முதல் முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார்.
பால்மிராஸ் அணிக்காக 47 ஆட்டங்களில் விளையாடி 16 கோல்களும், மான்செஸ்டர் அணிக்காக 39 ஆட்டங்களில் விளையாடி 20 கோல்களும் அடித்துள்ளார். அதேபோல் பிரேசிலின் அண்டர் 20 அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 2 கோல்களும், அண்டர் 23 அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 5 கோல்களும் போட்டுள்ளார்.
அதனால் பிரேசிலின் தேசிய அணியில் இடம் பிடித்து 15 ஆட்டங்களில் விளையாடி 9 கோல்கள் போட்டு இப்போது ரஷ்ய உலக கோப்பையிலும் விளையாட உள்ளார். அதனால் வருவாய்க்கு குறைவில்லை.
ஆனாலும் அம்மாவிடம் கை செலவுக்காக காத்திருக்கிறார். மகனின் சம்பளத்தை லூசிதான் வாங்குகிறார்.
அதுமட்டுமல்ல பையன் புகழ் மயக்கத்தில் கெட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
பார்ட்டிகளுக்கு அனுப்புவதில்லை. வெளிநாடுகளில் தங்கும் போதும் குடிக்க, புகைக்க அனுமதில்லை.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணிக்காக விளையாட சென்ற போது லூசியும் உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
பெண்களை தன் மகனிடம் அண்ட விடாமல் அரணாக இருக்கிறார் லூசி. ‘ஏன் பெண் தோழிகளிடம் உங்கள் பையனை பேச அனுப்பதில்லை’ என்று கேட்டால் லூசி சிரித்துக் கொண்டே சொல்கிறார், ‘ பேசத் தடையில்லை.
நீண்ட முத்தம் என்று தடம் மாறக்கூடாது’ என்கிறார்.
இதற்கு கேப்ரியல், ‘ ‘அம்மாதான் எனக்கு காவலர், வழிகாட்டி எல்லாம். எனக்கு என்ன தேவை என்பது என்னை விட எங்க அம்மாவுக்கு நன்றாக தெரியும்.
அதனால் அவர் சொல்வதை செய்கிறேன்.
எங்களை வளர்க்க அரும்பாடு பட்டவர் அம்மா’ என்கிறார். ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்த அம்மா பிள்ளை கேப்ரியல் அசத்துவதை பார்க்க லூசி மட்டுமல்ல உலகமும் காத்திருக்கிறது.