நாட்டில் அவசர கால சட்டம் அமுலில் இருப்பதாலும் பாதுகாப்பு காரணங்களைக் கவனத்திற்கொண்டும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடாத்துவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இவ்வழிகாட்டல்கள் தொடர்பில் சகல மஸ்ஜித் நிர்வாகிகளையும் இமாம்களையும் அதிகவனம் செலுத்துமாறும் அச்சபை கேட்டுக் கொள்கின்றது. அவ்வழிகாட்டல்களாவன,
1.தான் ஜும்ஆவுக்கு வருகை தருவதால் தனது வீட்டிலுள்ள குழந்தைகள் பெண்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சமுள்ளவர்கள் தத்தமது வீடுகளில் ளுஹ்ரைத் தொழுது கொள்வதற்கு பூரண அனுமதி உண்டு.
2.ஜுமுஆப் பேருரையை “உயிர்களை மதிக்கும் இஸ்லாம்” எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளல்.
3.ஊடரங்குச் சட்டம், அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை மதித்து நடத்தல் வேண்டும்.
4.மஸ்ஜித்களில் குறிப்பாக ஜும்ஆ நடைபெறும் மஸ்ஜித்களில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை முன்னரே பரிசோதித்துக் கொள்ளல் வேண்டும்.
5. ஜுமுஆவுக்கு வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.
6.வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது வாகச் சொந்தக்காரர்கள் தத்தமது தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் எழுதி வைத்தல் வேண்டும்.
7.மஸ்ஜிதுக்கு வருகை தருபவர்கள் விடயத்தில் அவதானமாக நடந்துகொள்வதோடு எவ்வித பொதிகளையும் மஸ்ஜித் வளாகத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதித்தல் கூடாது.
8.குத்பாவையும் தொழுகையையும் 30 நிமிடத்துக்கு மேற்படாமல்; சுருக்கிக் கொள்ளல்.
9.குத்பா மற்றும் தொழுகை நடைபெறும்போது மஸ்ஜித் நிர்வாகம் பொருத்தமாகக் கருதுகின்றவர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் வேண்டும். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஜும்ஆ முடிந்த பிறகு ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளல் வேண்டும்.
10.ஜுமுஆ நடாத்த முடியாதளவு அச்சம் நிலவுகின்ற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நம்பிக்கையான சிலரை நியமித்தல் வேண்டும். அவர்கள் ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுதுகொள்வார்கள்.
11.பதின் மூன்று வயதுக்குட்பட்டவர்களை மஸ்ஜிதுக்கு அழைத்து வருவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

