தற்காலத்தில் செல்ஃபி மோகம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில், செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வோட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, “சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு இந்த செயலி கற்றுக்கொடுக்கும் என்கிறார்கள். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கெமராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது.
சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவும். ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் முகங்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், பயனாளர்கள் மிகச்சிறந்த செல்ஃபிக்களை எடுக்க முடியும். செல்ஃபி எடுத்தபிறகு, அவற்றை எடிட் செய்யும் செயலிகளுக்கு மத்தியில், இந்த செயலி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த செயலி மூலம் நீங்கள் செல்ஃபி எடுக்கும்போது கெமரா கோணம், முகத்தின் அளவு, ஒளி கிடைக்கும் திசை உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பெறலாம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான சிறந்த அனுபவத்தைத் தரக்கூடிய இந்த செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.