தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஏக்கிய ராச்சிய அரசியல் யாப்பினை இலங்கை அரசாங்கம் திணிக்க முயற்சிப்பதாக தெரிவித்து, அதனை எதிர்ப்பதற்கு தமிழக அரசியல் பிரமுகர்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில் அவர்களை சந்திக்க தமிழ் தேசிய பேரவையினர் இன்றையதினம்(16) சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நல்ல விடயமாகவே நான் பார்க்கிறேன்
இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் எமது பின்னடைவுகள் குறித்து தமிநாட்டு அரசியல் பிரமுகர்களுடனேயோ அல்லது வேறு தரப்பினரிடையேயோ கலந்துரையாடி, நிலைமைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதை ஒரு நல்ல விடயமாகவே நான் பார்க்கிறேன்.

மாறுபட்ட கருத்துகள் இருக்கின்ற விடயங்கள் குறித்து பேசினால் அது வேறாக இருக்கும். ஆனால் இந்த சந்திப்பில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இருக்காது என நம்புகிறேன்.
ஏக்கிய ராச்சிய சர்ச்சை
ஏக்கிய ராச்சிய அரசியல் அமைப்பினை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக உறுதியாக எந்த இடத்திலும் கூறவில்லை. ஆகையால் நாங்களே கற்பனையில் ஒரு விடயத்தை உருவாக்கிவிட்டு, அதனை ஒரு சிக்கலாக எடுப்பது நல்லதாக எனக்கு தெரியவில்லை.

அரசாங்கம் முதலில் தமது கருத்தை சொல்லட்டும், அந்த அரசியல் யாப்பினை கொண்டுவரட்டும் அதன்பின்னர் பார்க்கலாம் என்றார்.













