எம்மில் பலருக்கும் சமச்சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இதற்கு பல நவீன சிகிச்சைகள் கண்டறியப்பட்டு பலன் அளித்து வருகிறது.
இருப்பினும் சிலருக்கு நவீன சிகிச்சைகள் முழுமையான பலனை வழங்குவதில்லை.
இந்நிலையில் கிரையோ அப்ளேஷன் என்ற புதிய கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது நோயாளிகளுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் பலருக்கும் அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி ஏற்படுவது போன்ற உணர்வு, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இது எம்முடைய இதயத்தின் மேற்பரப்பில் உள்ள அறைகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதன் அறிகுறியாகும்.
அதே தருணத்தில் இதன் காரணமாக உடலின் பிற பகுதிகளுக்கு இயல்பாக நடைபெறும் ரத்த ஓட்டம் தடைபட்டு, சமச் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பு ஏற்படும்போது அதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும்.
எம்மில் சிலருக்கு குழந்தைகள் பிறக்கும் போதே இதயத்தில் குறைபாடு உண்டாகும். வேறு சில குழந்தைகளுக்கு விவரிக்க இயலாத காரணங்களால் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படும்.
சிலருக்கு இதயத்தில் உள்ள வால்வுகளில் பிரச்சனை ஏற்பட்டு இதய பாதிப்புகள் உண்டாகலாம்.
மேலும் குருதி அழுத்த நோய், இயல்பான அளவைவிட கூடுதல் உடல் எடை, உடற்பயிற்சியின்மை, முழுமையான ஆழ்ந்த உறக்கமின்மை, மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
இன்றைய திகதியில் உலகில் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண், பெண் என இருபாலரும் இத்தகைய சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இத்தகைய பாதிப்புக்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 5 மடங்கு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
பல தருணங்களில் சீரற்ற இதயத் துடிப்பு எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்தாமல் பாரிய பாதிப்பை உண்டாக்கும்.
இதன்போது நுண் குழாய்களை உட்செலுத்தி இதயத்திற்கு செல்லும் மின் ஆற்றலை கட்டுப்படுத்தி சீராக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது நவீன மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய கிரையோ அப்ளேஷன் ( Cryoablation) என்ற புதிய கருவியின் மூலமான சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன்போது குளிர்விக்கப்பட்ட அல்லது திரவ நிலைக்கு உறைய வைக்கப்பட்ட நைட்ரஜன் டை ஓக்சைடு நுண் குழாயில் செலுத்தப்படுகிறது.
இதயத்தின் மேல் பகுதியில் உள்ள செல்களின் வெப்பத்தை இதுகுறைத்து, இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகிறது.
இந்த சிகிச்சை முறை 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு மில்லியன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் ஆரோக்கிய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உறைநிலை சிகிச்சை முறை சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு புதிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் லோரன்ஸ்
தொகுப்பு அனுஷா.