மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி. பி. எஸ். இ. நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சி. பி. ஐ. , விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. சிபிஎஸ்இ நடத்திய 10ம் வகுப்பு கணித தேர்வு மற்றும் பிளஸ் 2 பொருளாதார தேர்வு கேள்வித்தாள் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சிபிஎஸ்இ ஒப்புக் கொண்டுள்ளது.
மறு தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 2 பாடங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பாடங்களுக்கும் மறு தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரியானாவை ேசர்ந்த வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வினாத்தாள் வெளியான விவகாரத்தால், மாணவர்கள் மத்தியில், இளம் வயதிலேயே கல்வி முறையின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின், மற்ற கேள்வித் தாள்களும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதற்கு, வாய்ப்பு உள்ளது. எனவே, பிளஸ் 2 பொருளாதாரம் மட்டுமல்லாமல், அனைத்து பாடங்களுக்கும், நான்கு வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த வேண்டும்.
இதனால், தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்புமிக்க நேரம் மற்றும் எதிர்கால வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படக்கூடும்.
தேர்வு எழுதிய மாணவர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுவதால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் நாட்களை தவிர்த்து, மறு தேர்வுக்கான தேதியை அறிவிக்க வேண்டும். மேலும், பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்படும், மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த, ரோஹன் மாத்யூ என்ற மாணவன், ‘வினாத்தாள் வெளியானது குறித்து, சி. பி. ஐ. , விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ. எம். கன்வில்கர் மற்றும் டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.