குருநாகல் வைத்தியர் சாபி சிஹாப்தீன், கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளமைக்கான சாட்சிகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லையெனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எஸ்.பி. திசேரா நேற்று (09) நீதிமன்றில் விளக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து, வைத்தியர் ஷாபி, கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு மற்றுமொரு முயற்சியாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி தலைமையில் விசேட வைத்தி நிபுணர்களடங்கிய நிபுணத்துவ சபையின் அறிக்கையைக் கோரவும், அது கிடைக்கும் வரை அவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் குருநாகல் பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக நிபுணத்துவ சபையின் அறிக்கையானது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்று என்பதுடன் இதுவே சிறந்த நடை முறையென்றும் தெரிவித்த அவர், வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளார்.
இந்த அறிக்கை விரைவாக கிடைக்கப்பெற்றால், வழக்கு ஒத்திவைக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக வழக்கை விசாரணைக்குக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும் நீதிபதி நேற்று கூறியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜேனிகா பெரேரா நீதிமன்றுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதுடன், மகப்பேற்று விசேட மருத்துவ சபையின் தலைவரையும் இந்த பரிசோதனைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான வேண்டுகோளையும் அதில் அவர் விடுத்துள்ளதாகவும் நீதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.