சஞ்சய் தத்தின் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுத்து வரும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, தத் யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நடிகர் எனக் கூறியுள்ளார்.
பிகே, ஏகலவ்யா, லகே ரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்பிபிஎஸ், மிஷன் காஷ்மீர் ஆகிய படங்களில் விது வினோத் சோப்ராவுடன் சஞ்சய் தத் இணைந்து பணியாற்றியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள பூமி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விது வினோத் சோப்ரா, “சஞ்சய் தத் அபூர்வமான மனிதர். 30-40 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். ஆனால் ராஜ்குமார் ஹிரானி அவரின் கதையை சொல்லும்போதுதான் அவரைப் பற்றிய உண்மை தெரிந்தது. அவரை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். அவரைப் போன்ற ஒருவரை நான் சந்தித்ததும் இல்லை. அவரைப் போன்ற ஒருவரை சந்திப்பேனா என்றும் தெரியவில்லை. அவரைப்போல இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறேன்.
அவர் எனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியுள்ளார். நான் எடுத்துள்ல 4 படங்களில், 3ல் அவர் நடித்துள்ளார். நான் எடுக்கும் 5வது படம் அவரைப் பற்றியது. நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர் தான் காரணம். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது அற்புதமாக இருக்கிறது” என்று பேசினார்.