கார் விபத்தில் படுகாயம் அடைந்து, ‘கோமா’ எனப்படும் நிரந்தர மயக்க நிலையில் விழுந்த பெண்ணுக்கு, 27 ஆண்டுக்கு பின், நினைவு திரும்பியது.
மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர், அபுதாபியை சேர்ந்தவர், முனிரா அப்துல்லா, 59. இவரது மகன், ஓமர் வெப்யர், 31.கார் விபத்துகடந்த, 1991ம் ஆண்டில், வெப்யருக்கு, 4 வயதாக இருந்த போது, அவனை பள்ளியிலிருந்து, காரில், வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார் முனிரா. அப்போது, எதிரே, பஸ் ஒன்று வேகமாக வந்தது.விபத்து நடக்கப் போவதை உணர்ந்த முனிரா, மகனை கட்டியணைத்து கொண்டார். கார் மீது, பஸ் மோதியது. தாயின் பாதுகாப்பால், வெப்யர், லேசான காயத்துடன், தப்பித்தார்.ஆனால், படுகாயம் அடைந்த முனிரா, கோமாவில் விழுந்தார்.
அபுதாபி மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட முனிரா, மேல் சிகிச்சைக்காக, பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு, டாக்டர்கள், தீவிர சிகிச்சையளித்தும், அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை.சில ஆண்டுகளுக்கு பின், முனிரா, அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தும், அவர், கோமாவிலிருந்து மீளவில்லை.
இதற்கிடையில், முனிராவின் சிகிச்சைக்கு, தேவையான நிதியுதவியை செய்ய, அபுதாபி நாட்டின், பட்டத்து இளவரசர், முன் வந்தார்.இதையடுத்து, 2017ல், ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், முனிரா சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு, பல்வேறு அறுவை சிகிச்சைகள், செய்யப்பட்டன.இதன் பலனாக, சில மாதங்களுக்கு முன், கோமாவிலிருந்து மீண்டார் முனிரா. தன் மகனின் பெயரை சொல்லி அழைத்தார். 27 ஆண்டுகளுக்கு பின், கோமாவிலிருந்து, முனிரா மீண்டதால், அவரது மகனும், டாக்டர்களும், பெரு மகிழ்ச்சியடைந்தனர்.
இது பற்றி, வெப்யர் கூறியதாவது:எனக்கு, நினைவு தெரிந்தது முதல், என் தாயை, கோமா நிலையில் தான், பார்த்து வந்தேன். ஆனால், ஒருநாள், அவர் நிச்சயம், கோமாவிலிருந்து மீள்வார் என்ற, நம்பிக்கை எனக்கு இருந்தது.அந்த நம்பிக்கை, இப்போது,வெற்றி பெற்றுள்ளது. என் தாய், என் பெயர் சொல்லி அழைத்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு, அளவே இல்லை. 27 ஆண்டுகளுக்கு முன், நடந்த சில சம்பவங்கள், அவருக்கு நினைவில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.