இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை – ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை கேட்ட போது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை சிறை பிடித்து , தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது இரு சந்தேக நபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் டி சில்வாவின் கீழ் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வெள்ளவத்தை ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில், நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வாடகை அடிப்படையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தனது வீட்டின் கீழ் மாடியை தங்கு விடுதியாக வழங்கியுள்ளார்.
அதன்படி, தம்மை இராணுவ புலனாய்வளர்கள் என கூறிக்கொண்ட இருவர் அவ்வீட்டின் கீழ் மாடியை அண்மையில் நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொன்டுள்ளனர்.
எனினும் வீட்டின் வடகை பணத்தை அவர்கள் வழங்காததால், அதனைப் பெற வீட்டின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாலை வேளையில், கீழ் மாடிக்கு சென்றுள்ளார்.
அவர் சென்று வாடகை பணத்தை கேட்ட போது, அவரை உள்ளே இழுத்து, அவரது கைகளுக்கு விலங்கிட்டு, வயர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவர் கடுமையாக சந்தேக நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
வாடகை பணம் பெறச் சென்றவரை காணாமல் வர்த்தகரின் சகோதரரும் உறவினர் ஒருவரும் பின்னர் கீழ் மாடியை நோக்கி விசாரிப்பதற்காக சென்றுள்ளதுடன் அவர்களையும் சந்தேக நபர்கள் தங்குமிடத்திலேயே கட்டி சிறைவைத்து தாக்கியுள்ளனர்.
இதன்போது தாம் இராணுவ புலனாய்வளர்கள் எனவும், வர்த்தகரின் சொத்து விபரங்கள் மற்றும் அதனை உழைத்த முறைமை தொடர்பிலும் சுமார் 8 மணி நேரம் அவர்கள் விசாரித்துள்ளனர்.
அதன் பின்னர் மறு நாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் வருவர் எனவும் அவர்களுடன் பேசி சமரசம் செய்துகொள்ளலாம் எனவும் சந்தேக நபர்கள், தாம் சிறைப் பிடித்து தாக்கிய மூவரிடமும் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் பொலிஸாரிடமோ வேறு யாரிடமோ வாய்த்திறக்கக் கூடாது என கட்டளையிட்டு, தொடர்ந்தும் அவர்களை சிறைப்படுத்தி வைத்திருந்துள்ளனர்.
இந் நிலையில், பின்னர் சந்தேக நபர்கள் மச்சினன் முறையிலான நபரை மட்டும் மேல் மாடிக்கு செல்ல அனுமதித்துள்ள நிலையில், அதன்போது அவர் விடயத்தை வெள்ளவத்தை பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிசாத் டி சில்வா, குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார, உப பொலிச் பரிசோதகர் ரந்திக, பொலிஸ் சார்ஜ்ன் (5346) சஞ்ஜீவ, பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஹசித்த் (12250),சில்வா (88829), ராஜபக்ஷ் (19191), தர்மசிறி (30867) உள்ளிட்ட குழுவினர் உடனடியாக செயற்பட்டு ஹார்மர்ஸ் அவனியூ பகுதி வீட்டை சுற்றி வளைத்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் வீட்டு உரிமையாளர் உள்ளிட்டோரை சிறைப்படுத்தி வைக்க பயன்படுத்திய கை விலங்கு, வயர்கள் உள்ளிட்டவற்றை மீட்டுள்ள பொலிஸார் அது தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கை விலங்கானது இராணுவ கோப்ரல் ஒருவரிடமிருந்து தமக்கு கிடைத்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ள போதும் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வாழைச்சேனையை சேர்ந்த சந்தேக நபர்கள், கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசார்ணைகளை கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெத்ததந்திரியின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]