ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இடைக்கால அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலமைப்பினூடாக கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மக்களின் கருத்தறியும் நோக்குடன் பொதுத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாகவும் பொதுத் தேர்தல் நடைபெறும் வரையான காலப்பகுதிக்கே இந்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல் கலாசாரம் தொடர்பில் பொது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு தகுதியும், நிபுணத்துவம் மற்றும் அறிவுத்திறனுடையவர்களை நியமிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.