குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கர்நாடகம், மகாராஷ்டிரா, லட்சத்தீவு, குஜராத் ஆகிய வெளி மாநிலங்களில் கரை ஏறிய தமிழக மீனவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை 13 வள்ளங்களில் மீன் பிடிக்க சென்ற 35 மீனவர்கள், 43 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 மீனவர்களின் விவரங்கள் தெரியாமல் இருப்பதாக, மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் மாயமாக இருந்த மீனவர்கள் ஆங்காங்கே வெளி மாநிலங்களில் கரை ஏறி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி 13 வள்ளங்களில் சென்ற 35 மீனவர்களும், 37 விசைப்படகுகளில் சென்ற 398 மீனவர்களும் என மொத்தம் 433 மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டி இருக்கிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறி உள்ளார்.
இதற்கிடையே மீனவ கிராமங்களில் மாயமானவர்கள் தொடர்பாக தற்போது குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் வரை 139 பேர் மாயமாகி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு, மேன் மிஸ்சிங் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து நேற்றும் ஏராளமானோர் புகார் அளித்தனர். தூத்தூர், தேங்காப்பட்டணம், முட்டம், இரவிபுத்தன்துறை, நீரோடி, மார்த்தாண்டன் துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 412 பேர் மாயம் என புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.