கவுன்டி சாம்பியன்ஷிப்பில் கோஹ்லி விளையாட உள்ளார்.
இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., ‘சீசன்’ ஏப்ரல் 7- மே 27 வரை நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். பின், ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினர் 3 ‘டுவென்டி–20’, 3 ஒரு நாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றனர். முதல் ‘டுவென்டி–20’ ஜூலை 3ல் மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.
எந்த அணி
கடந்த 2014ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என இழந்தது. இதில் கேப்டன் கோஹ்லி, (5 போட்டி, 134 ரன்) சொதப்பினார். இம்முறை ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இங்கிலாந்தின் தட்பவெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மை உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ள முதல் தர போட்டியான கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட உள்ளார். இதில் சர்ரே அணிக்காக களம் காண்கிறார். மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடுகிறார். இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான (ஜூன் 14–18, பெங்களூரு) டெஸ்டில் கோஹ்லி பங்கேற்க மாட்டார்.
அஷ்வின் பங்கேற்பு
இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில்,‘‘ இந்திய வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக, கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட அனுமதி தரப்பட்டுள்ளது. கேப்டன் கோஹ்லி, ஜூன் மாதம் சர்ரே அணிக்காக களமிறங்க உள்ளார். இதைப்போல், புஜாரா (யார்க்சயர்), அஷ்வின் (வார்விக்சயர்), இஷாந்த் சர்மாவும் (சசக்ஸ்) கவுன்டியில் பங்கேற்கின்றனர்,’’ என்றார்.