புதுமுக நடிகர் அமல் அஜித் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில், மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவரது மனைவியான திருமதி பூர்ணிமா பாக்யராஜ் என இருவரும் கணவன்- மனைவியாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சாய் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கன்னடத்துப் பைங்கிளி’ திரைப்படத்தில் அமல் அஜித், அதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ‘லொள்ளு சபா’ ஜீவா ஆகியோர்களுடன் யூட்யூப் பிரபலங்களான கூமாபட்டி தங்கப்பாண்டி – ஆட்டோக்காரன் தீபக் – இடியாப்பம் சிவா – ஆகியோர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .ராஜேந்தர் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை எம் பி எம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இந்துமதி கோபி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில்.. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் கே .பாக்யராஜ் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை படக் குழுவினர் முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் சாய் ரமணி பேசுகையில், ” 35 ஆண்டுகளுக்குப் பிறகு கே. பாக்யராஜ்- பூர்ணிமா பாக்யராஜும், கணவன் மனைவியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தமான படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில்.. அவர் மறைந்தார். அதன் பிறகு அவர் சம்பந்தமான காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் பயன்படுத்த உள்ளோம். 90களில் தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்திய இரு நேரதிர் துருவங்கள் தான் டி ராஜேந்தரும்… கே பாக்யராஜும். இந்த சாதனையாளர்கள் முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். கே பாக்யராஜ் நடிக்க.. டி ராஜேந்தர் இசையமைத்திருக்கிறார்.
1990களில் தமிழக கர்நாடக எல்லையோரப் பகுதியில் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தில் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ” என்றார்.












