ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்
ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆவேசமாக பேசினார்.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது,
ஒன்றரைக்கோடி தொண்டர்களை ஜெயலலிதா என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இந்த கட்சியையும், இந்த ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. தொண்டர்களின் துணை எனக்கு இருக்கும்போது ஒருசிலரின் ஆட்டங்கள் இங்கே ஒன்றும் செய்துவிட முடியாது.
எனக்கு எல்லாமே நீங்கள்தான். ஆட்சியையும், கட்சியையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன் என்றுதான் ஜெயலலிதா உறுதியாக நினைத்து என்னிடம் விட்டுச்சென்றிருக்கிறார்.
புரட்சித் தலைவருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா பல சோதனைகளை தாண்டி கட்டிக்காத்தார். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே அதிமுக மூன்றாவது கட்சி என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
ஜெயலலிதா இப்போது நம்மிடம்தான் இருக்கிறார். நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை ஜெயலலிதா அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார். இன்று நடக்கும் சூழ்நிலைகளை பார்த்து நமக்கு தெரிகிறது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்மிடம் இருக்கும் வரை, நம்மை பிரித்தாள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப்போவார்கள்.
நம் இயக்கம், ஜெயலலிதா சொன்னது போல் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாரும் அசைக்க முடியாது. ஜெயலலிதாவும் நிறைய போராட்டங்களை சந்தித்துத்தான் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார்.
இப்போது நமக்கும் அந்த சோதனை வந்திருக்கிறது. நாமும் அதில் வென்று காட்டுவோம். நீங்கள் என்னுடன் துணை நிற்கும்போது நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை.
நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தோடும் நம்பிக்கை வைத்துள்ளதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று ஆவேசமாக பேசினார்.