ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,’’ என, சகால் தெரிவித்தார்.
இந்திய அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. கடந்த 8 ஆண்டுக்கு முன் கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 27 முதல் தர போட்டிகளில் தான் பங்கேற்றார். 2013ல் மும்பை ஐ.பி.எல்., அணிக்காக அறிமுகம் ஆனார். பின் 2014 முதல் பெங்களூரு அணியில் உள்ளார்.
இதுவரை 4 சீசனில் 70 விக்கெட்டுகள் (56 போட்டி) சாய்த்து விட்டார். சமீபத்திய ஒருநாள் (23ல் 43 விக்.,), ‘டுவென்டி–20’ (21ல் 35 விக்.,) போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத பவுலராகி விட்டார். வரும் ஐ.பி.எல்., தொடர் குறித்து சகால் கூறியது:
இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பெங்களூரு அணிக்கும் இவர் தான் ‘தல’. கடந்த 4 ஆண்டுகளாக இவரது அணியில் விளையாடுகிறேன். இதனால், எங்களுக்கு இடையே நல்ல புரிதல் மற்றும் ஒரு வித இணைப்பு உள்ளது. இதனால், இவரது அணியில் ‘பிரீயாக’ செயல்பட முடிகிறது.
நம்பிக்கை உள்ளது
நமது பவுலிங்கிற்கு ஏற்ப, பீல்டிங் அமைப்பை மாற்றிக் கொள்ளவும், நமது திறமைக்கு ஏற்ப பவுலிங் செய்யவும் அனுமதி தருவார். கடந்த நான்கு ஆண்டுகளில், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
உலக கோப்பை தொடருக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளது. இப்போதைக்கு இதுகுறித்த சிந்தனை இல்லை. இருப்பினும், ஒவ்வொரு அடியையும் சிறப்பாக எடுத்து வைக்க விரும்புகிறேன். எனது அடுத்த இலக்கு ஐ.பி.எல்., தொடர். இதில் சிறப்பாக செயல்பட்டு, பெங்களூரு அணிக்கு வெற்றி தேடித் தரவேண்டும்.
சபாஷ் சுந்தர்
சமீபத்திய முத்தரப்பு தொடரில், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், சிறப்பாக செயல்பட்டார். ‘பவர் பிளே’ ஓவர்களில் இவர் நன்கு வீசியதால், அடுத்து வந்த எனக்கு, இன்னும் வித்தியாசமாக பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு சகால் கூறினார்.
டெஸ்ட் எப்போது
சகால் கூறுகையில்,‘‘ ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும், டெஸ்டில் விளையாடுவது என்பது கனவாக இருக்கும். இதில், சற்று பொறுமையாக செயல்பட வேண்டும். டெஸ்ட் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும், அதை ஏற்க தயாராகவே உள்ளேன். இதற்கான தகுதி எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்,’’ என்றார்.