சென்னை அணி வென்ற ஐ.பி.எல்., கோப்பைக்கு, சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், நேற்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இதைத்தொடர்ந்து, சென்னையில், ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம், மும்பையில் இருந்து, விமானம் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், சென்னை விமான நிலையம் வந்தனர்.
நேற்று மாலை, சென்னை, அடையாறில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தங்கி, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தி.நகர், வெங்கட நாராயணா சாலையில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஐ.பி.எல்., வெற்றி கோப்பை, எடுத்து செல்லப்பட்டது. அங்கு, கோப்பைக்கு, துளசி மாலை அணிவித்து, பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி, காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.