கிரிக்கெட் போட்டிக்கு அடுத்ததாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள புரோ கபடி லீக் போட்டி வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 30 மற்றும் 31ம் தேதிகளில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். தற்போது நடக்கவுள்ள 6வது புரோ கபடி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்பட 12 அணிகள் மோதுகின்றன.
இந்திய வீரர்களோடு ஈரான், வங்காளதேசம், ஜப்பான், கென்யா, மலேசியா, இலங்கை உள்பட 14 நாடுகளை சேர்ந்த 58 வீரர்களும் மோத இருக்கிறார்கள். தற்போது ஆடவரும் 87 நபர்கள் கடந்த ஆண்டு கபடி கதாநாயகர்கள் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்கள். கடந்த சீசனில் ஆடிய 21 வீரர்களை அந்தந்த அணிகள் தக்க வைத்து கொண்டு இருக்கின்றன.