பிரதமருக்கு மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை (04) முடிவடைந்த பின்னர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவித்துள்ளார்.
இன்று (03) ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொறுப்பு மற்றும் கலந்துரையாடலின் அடிப்படையில் புதிய குழுவொன்றை நியமித்து தேவையான மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களிலும் பிற தேர்தல்களிலும் மிகவும் பலம்வாய்ந்த ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலையடுத்து நியமிக்கப்பட்ட ருவன் விஜேவர்தன குழுவின் ஆலோசனைகளையும், இப்போது கிடைத்துள்ள வேறு ஆலோசனைகளையும் நீண்ட ரீதியில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கட்சியின் புதிய உறுப்பினர்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் பணிக்குழுவின் மூலம் நியமிப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி எதிர்வரும் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் பணிக்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை இரண்டு விஷேட கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கலந்துரையாடலில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதுடன் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை செயல்படுத்துவதை மேற்பார்வை செய்ய ஒரு குழுவும் நியமிக்கப்பட உள்ளது.
இந்த குழுவை நியமிக்கும் முறையை கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் பிரதமர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.