எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ த சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அதற்கமையவே எரிபொருள் விலைகளை அதிகரிப்பது போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த மே 13ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.
அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எனினும், அரசாங்கம் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி, அதனை 392 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதுடன், இதனை நீண்ட காலத்திற்கு தொடர முடியாது என்றார்.













