என்னை மன்னித்துவிடுங்கள்: கண்ணீர் விட்டு அழுத சானியா மிர்சா
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கண்ணீர் விட்டு அழுதார்.
ரியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, செக்குடியரசு ஜோடியிடம் தோற்றது. இதனால் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
இந்த நிலையில் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத சானியா மிர்சா, தோல்வி தந்த வேதனையில் கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீரை அடக்குவதற்கு பெரும்பாடு பட்ட அவர் நிருபர்களிடம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
அவர் கூறுகையில், இது எனக்கு கடினமான தருணமாக உள்ளது. என்னால் அதிகம் பேச முடியவில்லை. இருப்பினும் இதில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்.
சுதந்திர தின பரிசாக பதக்கத்தை நாட்டுக்கு அளிக்க முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதால் 2020ம் ஆண்டு ஒலிம்பிக்கில் என்னால் பங்கேற்க முடியுமா? என்பதை இப்போது தெளிவாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.