தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பான சூழல் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்ரீரெட்டி என்ற நடிகை தொடர்ந்து பலர் மீது அடுக்கடுக்கான குற்றங்களைக் கூறிக் கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக மேலும் சில நடிகைகளும் இறங்க விஷயம் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஸ்ரீரெட்டியை சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள் என்று சொன்ன பவன் கல்யாணையே அண்ணா என அழைப்பது அசிங்கம் என திருப்பித் தாக்கினார் ஸ்ரீரெட்டி. இந்த விவகாரங்களுக்காக பவன்கல்யாணின் அண்ணன் நாகபாபு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “போலீசிடம் செல்லுங்கள் என்று பவன் கல்யாண் சொன்னதில் என்ன தவறு. இந்த விவகாரத்தில் நிச்சயம் ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. இதில் எந்தெந்த அரசியல் கட்சிகள் எல்லாம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
எனது தம்பியின் புகழைக் கெடுக்க திட்டமிட்டுள்ளார்கள். நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என நினைத்துவிட வேண்டாம். இதற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கும் தெரியும். எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம். ஒரு தவறு செய்துவிட்டால் அதற்காக பொதுவெளியில் மன்னிப்புக் கேட்கும் குணம் கொண்டவர் பவன் கல்யாண். அவர் அமைதியாக இருக்கிறார் என எதையும் செய்ய வேண்டாம்,” என எச்சரிக்கை விடுத்தார் நாகபாபு.