எச்.1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி அல்லது கணவர் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்து விட்டது.
எச்.1 பி விசா மூலம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். அந்த விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளுக்கு எச்.4 விசா வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், எச்.1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர், அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் வகையில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் விதி வகுக்கப்பட்டது. இதை எதிர்த்து சேவ்ஸ் ஜாப்ஸ் யூ.எஸ்.ஏ. என்ற அமைப்பு (District of columbia circuit) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
எச்4 விசா வைத்திருப்போருக்கு பணி அனுமதி வழங்கப்பட்டதால் தங்களது வேலை பறிபோனதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை, கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
முதல் நிகழ்வில் இருந்து முழுமையாக விசாரித்து பின்னர் இறுதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மனுவை திருப்பி அனுப்புவதே சிறந்தது என்றும் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது. இந்த தற்காலிக நிவாரணத்தின் மூலம், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பெரிதும் பயனடைவர்.