எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் கைச்சாத்திடவுள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், சிறிகாந்தா தரப்பு, அனந்தி தரப்பு ஆகியன முதலில் கூட்டமைப்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது என்றும் பின்னர் பொதுஅமைப்புகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பான புதிய யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு தமிழர் ஐக்கிய முன்னணியென்ற பெயரை பரிந்துரைந்துள்ளபோதும், அதை தேர்தல்கள் திணைக்களம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில், புதிய பெயரை பரிந்துரைக்கும்படி தேர்தல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது. அதற்காக கொள்கையளவில் தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியை பதிவு செய்யும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் தரப்பு ஈடுபட்டுள்ளது. இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியென்ற பெயரிலேயே இந்த கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதேவேளை, இந்த பெயரை ஈ.பி.ஆர்.எல்.எவ் சூடினாலும், இந்த பெயரை க.வி.விக்னேஸ்வரனே பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது . தேர்தலில் களமிறங்க வசதியாக இந்த பெயரை விக்னேஸ்வரனே தெரிவு செய்தார்.
இந்த கூட்டணியில் பொ.ஐங்கரநேசன் தரப்பு தற்போது கைச்சாத்திடவில்லை.
முதலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்த பின்னர், தமிழ் மக்கள் பேரவை மற்றும் அதிலுள்ள சுமார் 100 பொது அமைப்புக்கள் இந்த கூட்டணியுடன் உடன்பாடு கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகிறது .