உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத முறியடிப்பில் இலங்கைக்கு நிபுணத்துவ உதவியை வழங்க, தேசிய காவல் படை கொமாண்டோக்கள் (கறுப்பு பூனைகள்) அணியொன்றை சென்னையில் தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100 பேரை கொண்ட இந்த அணி, குண்டுத் தாக்குதலிற்கு பிந்தைய விசாரணைகளில் நிபுணத்துவத்தை கொண்டவர்கள். தீவிரவாதம் மற்றும் பயண முறியடிப்பில் தேர்ச்சிமிக்க கொமாண்டோக்கள் சென்னையில் தயாராக வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஆளணி மற்றும் நிபுணத்துவ உதவியை இலங்கை, இந்தியாவிடம் கோரியிருக்கவில்லை. இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இது குறித்து பேசி, கொமாண்டோக்களை இலங்கைக்கு அனுப்புவதா என்பதில் இறுதியான முடிவெடுக்க வேண்டும், ஆனால் இலங்கையுட்பட்ட எந்த வெளிநாட்டிற்கும் இராணுவத்தை அனுப்புவதை இந்தியா விரும்பவில்லையென்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை, இந்திய புலனாய்வு அதிகாரிகள் இருவர் இலங்கையில் தங்கியிருந்து புலனாய்வு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.