கடந்த ஆண்டு இருமல் மருந்துகளை பயன்படுத்தியதனால் நிகழ்ந்த குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் அருந்திய குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர வைத்துள்ளது.
இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
இந்தியாவில் அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தது.
இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.