இரட்டை இலை சின்னம் யாருக்கு? ஓபிஎஸ்யின் அதிரடி திட்டம் ஆரம்பம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணி மனு அளித்தது. இதையடுத்து, இம் மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன் படி 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, இப்பதிலுக்கு மார்ச் 14ம் திகதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவின் பதிலுக்கான விளக்கத்தை தயார் செய்து, தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, தன் ஆதரவு எம்.பி.க்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் புதன்கிழமை பகல் 12 மணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசுகிறார்.