இசையமைப்பாளர் இளையராஜா, சேலத்தில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, தன் இளமைகாலம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். குறிப்பாக தான் எப்படி இசையமைக்க வந்தேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ஒரு பாடலை எத்தனை முறை கேட்டாலும் அன்றைக்கு தான் கேட்ட மாதிரி இருக்க வேண்டும். அது தான் நல்ல பாடலாக இருக்கும். நேற்று இருந்த மாணர்வகள் இன்று இல்லை, ஆற்றில் தண்ணீர் போல் புதிய நீரோட்டமாக இருக்க வேண்டும். நான் இசையமைத்த படங்கள் 1000 தாண்டி சென்றுவிட்டது. அதற்கு கணக்கே இல்லை.
பெரியகுளத்தில் இருந்து வைகை அணைக்கே பயணித்ததே எனது முதல் பேருந்து பயணம். அங்கு, நான் சம்பாதித்த ரூ.7 பணம் கொடுத்த மகிழ்ச்சி, இவ்வளவு காலம் சம்பாதித்த பணத்தில் கிடைக்கவில்லை.
இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காமல் சொந்தமாக சிந்தனை கொண்டிருக்க வேண்டும். பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமென்றால், திரையிசை பாடல்கள் கேட்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு வரும் பாடல்களின் இசை எல்லாமே எலக்ட்ரானிக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அந்த இசையை கேட்கும் போது உங்களின் மூளை செயல்படாமல் போய்விடும் என்றார்.