இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொலை செய்ய தீவிரவாதிகள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் நைமூர் ஜகாரியா ரஹ்மான் (20), முகமது அகிப் இம்ரான் (21). இவர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக தீவிரவாத எதிர்ப்பு போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்தனர்.
அவர்கள் நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை குண்டு வைத்து கொலை செய்ய இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக பிரதமரின் அலுவலகம் உள்ள டவுனிங் தெருவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்யவும், அப்போது ஏற்படும் குழப்பத்துக்கு இடையே அலுவலகத்தில் புகுந்து மேயை கத்தியால் குத்தி ரஹ்மான் கொலை செய்யவும் சதி திட்டம் போடப்பட்டு இருந்தது.
இந்த சதித் திட்டத்தை பாதுகாப்பு படைகள் முறியடித்தன’ என்று கூறப்படடுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 தீவிரவாதிகளையம் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.பிரதமர் மேயை கொல்ல சதி செய்த தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












