ஆஸ்திரேலிய சிறப்பு படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு தனது இரகசிய விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக படைத்துறை உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2001 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினருக்கு எதிராக இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாநில உச்ச நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையிலும் பேர்த்திலும் நடைபெற்றுவரும் இந்த விசாரணைகளில், குற்றச்சாட்டுக்கு உள்ளான படையினர் தங்களது வாக்குமூலங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்றும், ஒரு சிலருக்கு எதிரான விசாரணைகள் பலமணிநேரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்கள விசேட அதிகாரி ஒருவரின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரகசிய விசாணை அறிக்கை ஒன்று அண்மையில் வெளிவந்திருந்தது.
இந்த அறிக்கை மூலம் கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய படையினர் ஈடுபட்ட பல தகாத சம்பவங்களும் சட்டத்துக்கு முரணான நிகழ்வுகளும் அம்பலத்துக்கு வந்திருப்பதாக Fairfax ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரம், தற்போது முழுமையான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் படைத்துறையின் தொடர்ச்சியான பணிகளின்போது தூய்மையான இராணுவ கலாச்சாரம் ஒன்றை பேணுவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.