கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வினின் கேப்டன்சி குறித்து அந்த அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க வீரருமான கே.எல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல்-லின் 11வது சீஸனில் புதிய கேப்டன் அஸ்வின் தலைமையில் களமிறங்கியது. அஸ்வின் தலைமையில் அந்த அணி, ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் கெத்து காட்டியது. ஆனால், பிற்பாதியில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, ஏமாற்றமளித்தது. லீக் சுற்றின் முடிவில் 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்தையே அந்த அணியால் பிடிக்க முடிந்தது.
இந்தநிலையில், அஸ்வின் கேப்டன்சி மற்றும் ஐபிஎல் அனுபவம் குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “போட்டிகளின் முடிவுகள் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது உண்மைதான். ஆனால், ஓர் அணியாக இந்தத் தொடர் எங்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தந்தது. தொடரின் முதல் பாதி எங்களுக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், இரண்டாவது பாதி, எங்கள் அணிக்கும் கேப்டனுக்கும் துரதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது. அதேநேரம், இந்தத் தொடர் கேப்டனாக அஸ்வினுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என நான் நம்புகிறேன்இளம் அணியை வழிநடத்துவது எளிதான காரியமல்ல. ஆனால், அஸ்வினைப் பொறுத்தவரை அவர் சிறப்பாகவே செயல்பட்டார். ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனங்கள் குறித்தும், அவர் எந்த இடத்தில் முன்னேற்றம் காண வேண்டும் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நிறையவே பேசினார். அவரது தலைமை, வீரர்கள் பலருக்கு உதவிகரமாக இருந்தது. குறிப்பாக எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அவரது கருத்துகள் வலு சேர்த்தது’ என்று தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் ஃபேவரைட் தருணம் குறித்த கேள்விக்கு, 14 பந்துகளில் சாதனை அரைசதம் அடித்த இன்னிங்ஸ் ஸ்பெஷலானது என்று ராகுல் தெரிவித்தார்.