ஆட்சி அதிகாரத்தை மஹிந்தவை பழிவாங்குவதற்கு மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாமல் மேலும் கூறியுள்ளதாவது, “குறுகிய காலத்தில் நாட்டின் முதலாவது அரசியல் சக்தியாக பொதுஜன பெரமுன தற்போது உருவெடுத்துள்ளது.
நாங்கள் கட்சியை ஆரம்பிக்கும்போது பல சவால்களுக்கு முகம் கொடுத்தோம். மேலும் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால, புதிய கட்சியை ஆரம்பித்தால் வீதியில் நடக்க வைத்து விடுவேன் என கூறினார்.
வீதியில் நடப்பது எமக்கு பெரிய விடயமல்ல.ஆகையால் தேர்தல் ஒன்றை கோரி நாங்கள் நடந்தோம்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் மஹிந்தவை பழிவாங்குவதற்கு மாத்திரமே ஆட்சி அதிகாரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்ததே ஒழிய வேறு எந்ததொரு சிறந்த விடயங்களையும் முன்னெடுக்கவில்லை” என நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.