இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு (FFSL) 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியிலிருந்து FIFA (சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம்) இடைக்காலத் தடை தடை விதித்துள்ளது. சகல உறுப்பு சங்கங்களுக்கும் பீபாவினால் 22ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றிக்கையில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
FIFA செயலாளர் நாயகம் ஃபட்மா சமூராவினால் கையொப்பமிடப்பட்டு உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில்,
‘FIFA பேரவையின் பணியகம் 2023 ஜனவரி 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு அமைய FIFA சட்ட விதிகளின் 16ஆவது பிரிவின் பிரகாரம் மறு அறிவித்தல்வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இத்தால் உங்களுக்கு அறியத்தருகிறோம்.
‘இதன் காரணமாக FIFA சட்டவிதிகளின் 13ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளதற்கு அமைய 2023 ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அதன் சகல உறுப்பினர் உரிமைகளையும் இழக்கிறது. எனவே தடை நீக்கப்படும்வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதித்துவம் மற்றும் கழக அணிகள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற முடியாது. FIFA அல்லது AFCயினால் ஏற்பாடு செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்கள், பாடநெறிகள், அல்லது பயிற்சிகளின் அனுகூலங்களை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அல்லது அதன் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் அனுபவிக்க முடியாது. அத்துடன் FIFAவின் தடை இருக்கும்வரை FFSLஉடன் அல்லது அதன் அணிளுடன் நீங்களும் உங்களது துணை நிறுவனங்களும் எந்தவித விளையாட்டுத்துறை தொடர்பிலும் ஈடுபடவேண்டாம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.