தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தி தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை பெற்றுள்ளது சி.ஐ.டி .
இதன்படி ,மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸார் ,கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத் ,தெமட்டகொடை வீட்டில் பாத்திமா ஜெப்ரியா ,தெஹிவளையில் அப்துல் லத்தீப் ஜெமீல் ,கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் அலாவுதீன் அஹ்மத் முவாத் ,கிங்ஸ்பரி ஹோட்டலில் மொஹம்மட் முபாரக் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட ,சஹ்ரானின் உறவினர் என்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கவிருந்தாரெனவும் சொல்லப்படும் நவ்பர் மௌலவி என்பவரிடம் நடத்தப்படும் விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதற்கமைய ,சஹ்ரானின் மனைவி ஹாடியாவின் குருநாகல், கட்டுப்போத்த பொலிஸ் பிரிவின் கெக்குணகொல்ல வீட்டு பகுதிகளில் பொலிஸ் விசேட தேடுதல்களை செய்து வருகிறது.
2017 மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றையடுத்து தலைமறைவான ஸஹ்ரான் , புத்தளம் வண்ணாத்திவில்லு லெக்ரோவத்த பாழடைந்த இடமொன்றில் சில அடிப்படைவாத கருத்துக்களை பயிற்றுவித்து வந்தார் என தெரியவந்துள்ளது.
இவருடன் இணைந்து செயற்பட்டதாக சொல்லப்படும் சாதிக் அப்துல்லா,சாஹித் அப்துல்லா ஆகியோரையும் பொலிஸ் தேடுகிறது.
சஹ்ரானுடன் முகநூலில் நெருக்கமாக இருந்தவர்களின் பின்னணி குறித்து தேடப்படுகிறது .
ஸஹ்ரான் பாவித்ததாக சொல்லப்படும் தொலைபேசியின் சிம் அட்டை மருதமுனை ஒருவரின் பெயரில் இருந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் உறவினர் ஒருவர் ஏமனில் இருப்பதாகவும் அவர் ஐ எஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் பொலிஸ் சொல்கிறது. ஏமனில் உள்ள உறவினருக்கு சிம் அட்டையினை மருதமுனைவாசி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த சிம்மை சஹ்ரானுக்கு வழங்கியுள்ளார்.இது பற்றி விசாரணைகள் நடக்கின்றன.
சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு ஒன்று செயற்படுகிறது.

