உயிரிழந்த சோமாலிய குடியேற்றவாசிக்கு கனேடிய மக்கள் அஞ்சலி
கனேடிய நாட்டுப் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சோமாலிய குடியேற்றவாசி அப்திரஹ்மான் அப்திக்கு அவரது உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கனேடிய மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சமர்செட் சதுக்க பூங்காவில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பலர், மெழுகுவர்த்தி ஏற்றி தமது சோகத்தை வெளிப்படுத்தி, அஞ்சலி செலுத்தினர். இதன்போது, அப்தி மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு தமது கண்டனத்தையும் அவர்கள் தெரிவித்தனர்.
அஞ்சலி நிகழ்வின் பின்னர், அதில் கலந்துகொண்டு தமது குடும்பத்தினருக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் அப்திரஹ்மான் அப்தியின் குடும்பத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும், அவரது இறுதிக் கிரிகைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒட்டாவாவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மன நோயாளி என்று கூறப்படும் 37 வயதான அப்திரஹ்மான் அப்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டமையினால் கடும் காயங்களுக்கு உள்ளாகியதாகவும், அதனாலேயே உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிய குடியேற்றவாசியின் உயிரிழப்பு குறித்த விசாரணையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர்
கனேடிய வைத்தியசாலை ஒன்றில் அந்நாட்டுப் பொலிஸாரின் தடுப்புக் காவலில் இருந்த சோமாலிய குடியேற்றவாசி ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளமை தொடர்பிலான விசாரணைகளில் ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் கைது செய்யப்பட்ட 37 வயதான குறித்த நபர் தொடர்பிலான தகவல்கள் மற்றும் அவரது விவகாரங்களில் குழப்பநிலை காணப்பட்டதனை தொடர்ந்தே அது தொடர்பான விசாரணைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தினத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது, கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
குடியிருப்பு ஒன்றினுள் ஓடிச் செல்ல முயன்ற அவர் மீது பொலிஸார் சிலர் தாக்குதல் நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டோர் சிலர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
f