தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில அங்கு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ஒரேநாளில், 103 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 31 பேர் எனவும் அவர்களில் 78 ஆயிரத்து 349 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
23 ஆயிரத்து 934 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், தொற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வழியே பயணித்தவர்கள் என்ற அடிப்படையில் 34 பேர் அரசின் தனிமை முகாம்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், 29 ஆயிரத்து 673 கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா அறிகுறி, பாதிப்பு உள்ளிட்டவற்றுடன் மருத்துவமனைகளின் தனி வார்டுகளில் ஆயிரத்து 891 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதுமில்லாத நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் ஒரேநாளில் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து, பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 283 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, கரூரில் 51 பேரும், திருச்சியில் 33 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட அளவில் நேற்று, தஞ்சாவூரில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்திருப்பதோடு தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
