முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3 ஆயிரத்து 459 பேர் வீடு திரும்பியுள்ளனர் எனவும், ஆயிரத்து 311 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 28 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முடித்துக்கொண்டு 37 பேர் நேற்று தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களுடன் இக்கட்டடத்தில் இருந்து ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமையால் 37 பேருக்கும் இரண்டு முறை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3 ஆயிரத்து 459 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். ஆயிரத்து 311 தொடர்ந்து இந்த நிலையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரத்தினபுரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டமையின் பிரகாரம், இப் பிரதேசத்தில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” – என்றார்.

