கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மரண சடங்குகளில் மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்பதே தற்போது அவசியமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது. இதனை முற்றாக அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தற்போதுள்ள நிலைவரத்தின் படி ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே எண்ணுகின்றோம். இதுவரையில் இலங்கையில் புதன்கிழமை மாத்திரமே ஒரே தினத்தில் அதிகளவான நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.
எனினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைந்தவொரு எண்ணிக்கையாகும். எனவே வைரஸானது முழு நாட்டிலும் தீவிரமாக பரவுமளவுக்கு பாரதூரத்தன்மையை அடையவில்லை. ஒரு பிரதேசங்களிலில் மாத்திரமே தொற்றுக்குள்ளானோர் இணங்காணப்பட்டுள்ளனர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் இதனை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புகின்றோம்.
வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை பிரதானமாகக் காணப்படுவதோடு சமூக இடைவெளியைப் பேணுவதும் அத்தியாவசியமாகிறது. இதற்கு ஊரடங்கு சட்டம் மிக அத்தியாவசியமானதாகக் காணப்படுகிறது. எனவே அதனைத் தொடர வேண்டியுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டுக்குள்ளேயே இருப்பதாலும் பலர் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள ஒரு செயற்திட்டத்தால் பிரிதொரு விடயம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் அதே வேலை நீண்டகால மருந்துகள் எடுக்கும் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரரிழப்பவர்களின் மரண சடங்குகள் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மத கோட்பாடுகளின் படி செயற்பட வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளின் படி செயற்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தேசிய பிரச்சினையாகும். எனவே இது எவ்வித பேதமும் இன்றி அனைவரும் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட வேண்டிய தருணமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் இதனை ஒரு அரசியல் குழு மாத்திரம் கையிலெடுத்துக் கொண்டு செயற்படுவது அரசாங்கத்தின் ஒழுக்க நெறிகளுக்கு இழுக்காகும். பசில் ராஜபக்ஷ அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது ஒரு அரச அதிகாரியோ அல்ல. ஒரு அரசியல் கட்சியின் ஸ்தாபகராவார்.
அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுள்ளார். எனவே அவர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை எந்த அடிப்படையில் என்று எமக்கு விளங்கவில்லை. இவ்வாறானதொரு நெருக்கடியாக சூழலை தேர்தலை நோக்காகக் கொண்டு பயன்படுத்திக் கொள்வது பெரும் தவறாகும்.” என கூறினார்.













