கொரோனா வைரஸ் தொடர்பில் தமக்கு பேஸ்புக்கின் ஊடாக வந்த மூன்று பேர் மரணம் என்ற தகவலையே தாம் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தவறு என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித ஆகியோர் கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டார்கள் என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள சரத் பொன்சேகா,
தாம் சிறைக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றால் தாம் சிறைக்கு செல்ல தயார் என்று குறிப்பிட்டுள்ளார்
தாம் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் தமக்கு உத்தியோகபூர்வமான தகவலை பெற்றுக்கொள்ள வேறு வழியில்லை என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்
எனினும் தமது இந்த அறிக்கையை ஊடகங்களில் செய்தியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோது கடந்த திங்கட்கிழமை தொலைக்காட்சி ஒன்று அதனை அறிக்கையிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்க அதிகாரிகள் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சந்தேகம் உள்ளதாக கூறும்போது ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது 1500 பேர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்படியானால் ஜனாதிபதியை யாராவது கைதுசெய்வார்களா என்று சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் அரசாங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பில் சரத் பொன்சேகாவின் பதில் வெளியாகியுள்ள போதும் ராஜித சேனாரத்னவின் பதில் வெளியாகவில்லை.
பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு கொரோனவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் பொய்யான தகவலை கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

