துப்பறிவாளன் 2 படம் பிரச்னை தொடர்பாக விஷால் – மிஷ்கின் இடையே வார்த்தை போர் தொடங்கிவிட்டது. விஷால் ஒரு பொறுக்கி என மிஷ்கின் கடுமையாக பேசி உள்ளார்.
மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளிவந்த ‛துப்பறிவாளன் படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாரானது. விஷாலே நடித்து, தயாரிக்கிறார். படப்பிடிப்பு பாதிக்கு மேல் வளர்ந்த நிலையில் மிஷ்கினை நீக்கி, இயக்கம் பொறுப்பை விஷாலே ஏற்றார். நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிஷ்கின் பெயரே இல்லை, மாறாக விஷால் பெயர் இடம் பெற்று இருந்தது.
மிஷ்கினால் தனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார் விஷால். தனக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்பட கூடாது, அவரை நம்பி யாரும் இரையாகி விடாதீர்கள் என கூறியிருந்தார். மேலும் விஷாலுக்கு மிஷ்கின் 15 கட்டளை விதித்ததாக கூறி ஒரு அறிக்கையும் வெளியானது. அதில் அவருக்கு பல கோடி சம்பளம், மெயிலில் தான் தொடர்பு கொள்வேன், ரீ-மேக் ரைட்ஸ் என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய மிஷ்கின், விஷாலை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அவர் பேசுகையில், என் நிஜ சகோதரனை கூட அந்தளவுக்கு பார்த்தது இல்லை. நான் அவனை(விஷால்) அப்படி பார்த்து கொண்டேன். அவனுக்காக இரண்டாவது படத்திற்கு கதை எழுதினேன். மூன்று படம் தொடர்ந்து பிளாப்பான விஷாலுக்கு நான் கொடுத்த துப்பறிவாளன் படம் வெற்றி பெற்றது. அந்தப்படத்திற்கு நான் பெற்ற சம்பளம் ரூ.3 கோடி. துப்பறிவாளன் 2 கதையை கேட்டு என்னை கட்டிப்பிடித்து, நானே பண்றேன், தயாரிக்கிறேன் என்றான். அதற்கு முன்னதாக இந்த கதையை பாபி என்ற தயாரிப்பாளர் நான் பண்றேன் என்றார். அப்போது கூட விஷாலிடம் இந்த படத்திற்கு 20 கோடி வரை பட்ஜெட் தேவைப்படும். நீயே கடனில் இருக்கிறாய், உன்னால் முடியாது என்றேன். ஆனால் நான் தான் பண்ணுவேன் என்றான். அப்போது ஆரம்பித்தது எனக்கு தலைவலி. நான் திரைக்கதை எழுத ரூ.7.5 லட்சம் வாங்கினேன். ஆனால் பத்திரிக்கை செய்தியில் ரூ.35 லட்சம் வாங்கியதாக போட்டார்கள். அதை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
8 மாதம் நான் எழுதிய கதைய வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி விட்டு அவன் கையில் தூக்கி கொடுத்தேன். இப்போது என்னைப் பற்றி தவறாக பேசுகிறான். கதையை பற்றி உனக்கு எனக்கு தெரியும். நீ ஒரு பொறுக்கி பையன் டா. 9மணிக்கு தேர்தலில் நாமினேஷன் செய்த பொறுக்கிடா நீ. என்ன பெரிய எம்.ஜி.ஆரா, கருணாநிதியா… இந்த சமூக உன்னை பார்த்து கொண்டிருக்கிறது. என்ன செய்தாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு. நீ எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்று உன் குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, சகோதரனிடம் கேட்டுபார், அவர்கள் சொல்வார்கள் என்னைப்பற்றி. நான் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேள், அவர்கள் சொல்வார்கள்.
இயக்கம் பற்றி உனக்கு என்ன தெரியும். 38 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். ரூ.13 கோடி செலவு செய்துள்ளனர். ரமணா, நந்தா உன்னை நடுரோட்டில் நிற்க வைப்பார்கள் என்றேன், நடந்துவிட்டது. படம் நிற்க காரணமும் அது தான். என் தாயை பற்றி தவறாக பேசினான். இனி அவனை விட மாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருவன், அவனை பத்திரமாக பார்த்து கொண்டேன். இனி அவனிடமிருந்து தமிழ்நாட்டை நான் பத்திரமாக பார்க்க வேண்டும். யார் நீ, எங்கிருந்து வந்தாய், தமிழ்நாட்டில் நீ தான் காப்பாற்ற வந்தாயா, ஏன் இங்கு ஆட்கள் இல்லையா. இது ஒரு தமிழனின் கோபம். தம்பி விஷால் உனக்கு இருக்கு ஆப்பு. இப்போது தான் ஆரம்பமும், இனி நீ தூங்கவே முடியாது. உன் பக்கம் தர்மம் இருந்தால் வா குருஷேத்திற்கு போருக்கு, வா போரிடலாம். நன்றி என்றார்.
