Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு பின்வாங்கமுடியாது – விக்கி

February 17, 2020
in News, Politics, World
0

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய அரசு பெரு வரவேற்பளித்து இராணுவ பொருளாதார உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளமை தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக் காட்டி போராட்ட இயக்கங்களை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடச் சொன்னது இந்தியாவே.

இந்தியாவின் நேர்மை மீது நம்பிக்கை இழந்த புலிகள் இந்தியாவுடன் நேரடியாக மோதிய காரணத்தினால் இந்தியா – இலங்கைத் தமிழ் மக்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமை காரணம் என்று பலர் எழுதி இருக்கின்றார்கள்.

அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதில் வெற்றி கண்டார் என்று சிலர் கூறுவதிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை.

பின்னர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதும் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசல் அடைந்ததுடன் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை நீண்ட காலம் இந்தியா கடைப்பிடித்தது.

ஆனால், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்கை பார்த்து நின்று ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்திருந்தது.

யுத்தத்தை நிறுத்துவதற்கான பல வெளிநாட்டு இராஜதந்திர முயற்சிகள் நடைபெற்றபோதும் இந்தியா அவற்றுக்கு ஆதரவு அளிக்காமல் குந்தகமாக செயற்பட்டமை வெள்ளிடைமலையான ஒரு உண்மையே.

இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக அப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தமையும், எமது நாட்டு அரசியல்வாதிகள் இந்திய உயர்ஸ்தானிகர்களை உச்சி குளிரச் செய்து எம் நாட்டுத் தமிழர்கள் பற்றிப் பிழையான கருத்துக்களை அவர்களுக்குப் புகட்டி வந்தமையும், இலங்கை அரசாங்கங்கள் சீனாவைப் பயன்படுத்தி பூச்சாண்டி காட்டி இந்திய அரசாங்கத்தை இலகுவாக ஏமாற்றி வந்தமையும் இந்த வரலாற்றுத் தவறுக்கான காரணங்கள் எனலாம்.

மேலும் 13வது திருத்தத்தின் கீழ் தரப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் அன்றிலிருந்து தரப்படவே இல்லை. அதே போல 16ம் திருத்தத்தின் மூலமாக கூறப்பட்ட மொழி உரிமைத் தத்துவத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழே ஆட்சி மொழி என்ற அரசியல் அமைப்பின் 22வது விதி கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30 கீழ் 1 தீர்மானத்தினை இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அதில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துவரும் நிலையில், இந்தியாவின் ஆதரவினைத் தமக்கு அது சம்பந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைய விஜயம் அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எம்மக்கள் மத்தியில் இருக்கின்றன.

ஆனால், மனித உரிமைகள் சபையின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து மனித உரிமைகள் சபையின் ஊடாக இறுதி யுத்தம் தொடர்பாக இலங்கைக்கு இருக்கும் பொறுப்பு கூறல் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்படவேண்டும்.

வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக பொறுப்புக்கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது. தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவுக்கு பல வழிகளிலும் அனுகூலமாக அமையும்.

இந்தியா எது செய்தாலும் இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவிற்கு விஸ்வாசமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தியா உணர வேண்டும். எவ்வளவு தான் இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கினாலும் இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்ப்பன.

ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமாட்டார்கள். எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக் கொண்டு வரலாம்.

தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் இருக்கிறார்.

அவரது திறமை, சாணக்கியம், ராஜதந்திரம் ஆகியவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்வர். ஆகவே, இந்திய வெளியுறவு அமைச்சர் எமது பிரச்சனையைத் திறம்பட கையாள்வார் என்று நாம் நம்புகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பாடசாலை மாணவர்கள் 15 பேர் வைத்திய சாலையில்!

Next Post

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை கையளிப்பு

Next Post

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை கையளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures