அகிம்சாவாதியும், இந்தியாவின் தேசத் தந்தையுமான மகாத்மாகாந்தியின் நினைவு நாளை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணைத் தூதரகமும், அகில இலங்கை காந்தி சேவா சங்கமும், சர்வோதயமும் இணைந்து ஏற்பாடு செய்த போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மாபெரும் நடைபவனியும், நினைவு நாள் நிகழ்வுகளும் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது பல கிலோ மீற்றர் தூரம் நடைபெற்ற போதைப்பொருளுக்கெதிரான மாபெரும் நடைபவனியிலும் அதனைத் தொடர்ந்து யாழ். நகரிலுள்ள காந்தியின் உருவச் சிலையடியில் இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்விலும் அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண்ணொருவர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
மகாத்மாகாந்தியின் போதனைகளாலும், அவரது விடுதலை உணர்வுச் சிந்தனைகளாலும் அதிகம் கவரப்பட்ட குறித்த வெள்ளைக்காரப் பெண் யாழ். நகரிலுள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு நீண்டநேரம் காத்திருந்து மலர்மாலை அணிவித்தும் பின்னர் வணக்கம் செலுத்தியும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகாத்மாகாந்தி வெள்ளைக்காரர்களுக்கு எதிராக கடுமையாகப் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த நிலையில் அவரது நினைவுநாளில் வெள்ளைக்காரப் பெண்மணி மகாத்மாகாந்தி மீது தீவிர பக்தியுடன் அஞ்சலி செலுத்தியமை மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

