மன்னார், தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
100 அமெரிக்க டொலர் பெறுமதியான 706 நாணயத்தாள்களுடன் இச்சந்தேகநபர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தாராபுரம் சந்தி சோதனைச் சாவடியிலிருந்த இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியிலிருந்து 100 அமெரிக்க டொலர் பெறுமதியான 706 நாணயத்தாள்கள் இருந்த பொதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வெளிநாட்டு நாணயத்தாள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தலைமன்னாரைச் சேர்ந்த19 வயதுடையவர் ஆவார்.
இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தகவல் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த மற்றுமொருவர் அவருக்கு உதவி புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 38 வயதுடையவர் ஆவார்.

