போராளிகள் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியல் கைதிகளாக இருக்கின்றவர்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி நாம் பேச்சுக்களில் ஈடுபட இருக்கின்றோம்.
யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களாகியும் தொடர்ந்து சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், அவர்களிற்கு ஒரு பொதுமன்னிப்பை வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் போராளிகள் சார்பாக முன்வைக்கவுள்ளோம்.
இதேவேளை போராளிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தலைமைத்துவ சபைக்குள் ஜனநாய போராளிகள் கட்சியும் இருக்கின்றது.
போராளிகளின் கைகளில் அதிகாரம் வரும் வரை முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களிற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ் தலைமைகள் உதாசீனமாக செயற்படுவது தொடரத்தான் போகின்றது.
ஆகவே எதிர்வருகின்ற காலத்தில் போராளிகளின் ஜனநாயக வெற்றி முன்னாள் போராளிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

