இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்தவேளை, அந்த வீட்டை இன்று பிற்பகல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் கடந்த 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் முன்னாள் போராளி என அவரைக் குறிப்பிட்ட இராணுவத்தினர் மறுநாள் 16ஆம் திகதி நாகர்கோயில் பகுதியில் அதிகாலை 3 மணிக்கு சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர்.
வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் குறித்த நபரைக் கண்டித்தனர்.
இதன்போது, குறித்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கினார் என்றும் இராணுவச் சிப்பாயும் அவரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் சுற்றிவளைப்புத் தேடுதலில் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். எனினும் இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் கைது செய்யப்படாததால் இராணுவத்தினரின் தொடர் தேடுதல் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள வீட்டை இராணுவத்தினர் இன்று சுற்றிவளைத்தனர்.
அங்கு இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரது சகோதரன் நண்பர்களுடன் இருந்தவேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இராணுவச் சிப்பாயைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் போராளி தலைமறைவாகியுள்ள நிலையில் இராணுவத்தினர் தொடர் தேடுதலை முன்னெடுத்துள்ளனர்.

