ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்துக் கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எட்டுத்திக்கிலும் வெற்றி அலை வீசுவதால் அதனை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதற்காகவே தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி, திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் வெற்றிபெற்று விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் பிரசார வியூகமாக இருந்தது.
இதற்காகவே விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட மேலும் பலர் அரசியல் மேடைகளில் இனவாதத்தை கக்கினர். மதவாதத்தை தூண்டினர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் இவற்றை நிராகரித்தனர்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தால் அதனை வைத்து சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடிவிடலாம் எனவும் திட்டம் போட்டனர்.
எனினும், களநிலைவரத்தை சிறப்பாக ஆராய்ந்து, தந்திரோபாய விட்டுக்கொடுப்புடன் நிபந்தனையற்ற ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு தமிழ்த தேசியக் கூட்டமைப்பு முன்வந்தனர்.
இதேவேளை, சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியென புலனாய்வு அமைப்புகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அரச சார்பற்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இது உறுதியாகியுள்ளது.
சில மாவட்டங்களில் மஹிந்தவுக்கு ஆதரவு இருந்தாலும், அதற்கு சமாந்தரமாக சஜித் அலையும் வீசுகின்றது. ஆனால், சஜித்துக்கு சாதகமாக உள்ள மாவட்டங்களில், சஜித் 100 வீதம் என்றால் மஹிந்த 35 வீதம் என்ற நிலையே இருக்கின்றது. அதாவது 65 சதவீத மேலதிக வாக்குகளால் மாவட்டங்களை சஜித் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைப்பதே எமது இலக்காகும். அதற்காகவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றோம்.
சஜித்தால் மட்டுமே நாட்டில் நீடித்து நிலைக்ககூடிய நிலையான சமாதானத்தையும், நிலைபேண்தகு அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

