நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலையை நேற்று(வெள்ளிக்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று நிறைவேற்ற முடியாமல் போனவை நாளை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு முக்கியத்துவமளிப்பதைப் போன்று பொலன்னறுவை அபிவிருத்தியில் தனது முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் இன்று பெறுபேறுகளை தந்து கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொலன்னறுவை அபிவிருத்திக்கு தனக்கு அனைவரிடமும் இருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு நாட்டுக்காக முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் கிடைத்திருக்குமானால் இன்று முழு நாட்டிலும் பல விரிவான மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம், ஜனநாயகம், ஊடக சுதந்திரத்துடன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முக்கியமான பணிகளை தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் மேற்கொள்ளக் கிடைத்தபோதும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை இறுதி வரை கொண்டு செல்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது கொள்கைகளுக்கு, பொருத்தமான கருத்துக்களுக்கு உடன்பாடானவர்கள் பொறுப்புக்களை வகித்தால் கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இதனைப் பார்க்கிலும் அதிகமான பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்திருக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

